அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்ட இரு இளைஞர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி நகரில் 'விசா ஆலோசனை மையம்' (Visa Consulting Firm) ஒன்றை நடத்தி வந்த இந்த இளைஞர்கள், அதன் ஊடாக அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பலரிடம் பணத்தைப் பெற்றுள்ளனர்.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து மட்டும் சுமார் 35 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்தபடி வேலை பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றியதாக பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குறித்த நிறுவனத்தைச் சுற்றிவளைத்தனர்.
இதன்போது அந்த நிறுவனம் பணியகத்தின் எவ்விதச் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரமும் இன்றி இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்து 7 வெளிநாட்டு வேலை ஒப்பந்தங்கள், 5 கடவுச்சீட்டுகள் மற்றும் பணப் பற்றுச்சீட்டுப் புத்தகங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
இந்த மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் கம்பளை மற்றும் தலாத்துஓயா பிரதேசங்களைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் பணம் செலுத்தும் போது, அந்த நிறுவனம் பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.







No comments