Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொளுத்தும் வெப்பம்; குழந்தைகளை பாதுகாப்பது எப்படி ?


இலங்கையில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

இதற்காக பிள்ளைகளுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 

பிள்ளைகளுக்கு அதிக தூக்கம், உணவில் விருப்பமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு மேலதிகமாக நீர் மற்றும் திரவ உணவுகளை வழங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன், இந்த வெப்பமான சூழலில் தேமல், சொறி போன்ற தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், பிள்ளைகளை ஒரு நாளைக்கு இரு முறையாவது குளிப்பாட்டுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். 

பயமின்றி சுமார் 20 நிமிடங்கள் வரை அவர்களை நீரில் இருக்கச் செய்வதன் மூலம் தோல் நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஓட்டப்பந்தயங்களில் ஈடுபடும் மாணவர்கள் போதியளவு நீர் பருகாவிட்டால், நீரிழப்பு நிலை ஏற்படுவதுடன் 'வெப்ப அதிர்ச்சி' நிலைக்கும் உள்ளாகலாம் என வைத்தியர் எச்சரித்துள்ளார். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதயம் மற்றும் மூளை பாதிக்கப்பட்டு வலிப்பு, மயக்கம் அல்லது மரணம் கூட நிகழலாம் என்பதால் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று  மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து அல்லது திசை மாற்றமின்றியும் மணிக்கு 20-30 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் சாதாரண நிலையில் காணப்படும், எனினும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

No comments