Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அருச்சுனா எம்.பி க்கு எதிராக நீதிமன்றில் 2 மணி நேரம் சான்றுரைத்த வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்


வைத்தியர் அருச்சுனா இராமநாதன் தனக்கு எதிராக பரப்பிய அவதூறு தொடர்பில்யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் பருத்தித்துறை நீதிமன்றில் சுமார் 2 மணி நேரம் சான்றுரைத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடர்ந்த அவதூறு வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போதே வைத்தியர் கேதீஸ்வரன் மன்றில் சான்றுரைத்தார்.

கடந்த 04.07.2024 அன்று சாவகச்சேரி அடிப்படை மருத்துவமனையின் மருத்துவ அத்தியேட்சகராக வைத்தியர்  அர்ச்சுனா பணியாற்றிய போது, யாழ்ப்பாண மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலி நிவாரணிகளை போதை மருந்துகளாக மருந்தகங்கள் வழியாகப் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு விற்பதாக  குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். 

இந்தக் கூற்றுத் தொடர்பிலேயே இந்த அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கின் முன்னாய்வின் போது, அக்குறிப்பிட்ட காணொளி தன்னால் தான் பதிவேற்றம் செய்யப்பட்டதையும், அச்செய்தி தன்னால் தான் கூறப்பட்டதையும் அர்ச்சுனா ஏற்றுக்கொண்டிருந்தார். 

மேலும், அக்குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நீதிமன்றத்தில் மெய்ப்பிப்பார் எனத் தமது மறுமொழியிலும் குறிப்பிட்டிருந்தார்.

அந்நிலையில் வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, மன்றில் சான்றுரைத்த மருத்துவர் கேதீஸ்வரன், 

தமது பணிக்காலத்தில் வலி நிவாரணிகளை மருத்துவச் சீட்டு இல்லாமல் வழங்கப்படுவது தொடர்பாக வந்த குற்றச்சாட்டுகள் குறித்தும், அது தொடர்பில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுக்கு இடையில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையொன்றின் மூலம் நீதிமன்றத்தில் சான்றுகளுடன் சமர்ப்பித்தார். 

இது தொடர்பாக மருந்தகங்கள், அரச மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவ நிலையங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சான்றுகளின் அடிப்படையில் தமது கருத்துகளை முன்வைத்தார்.

அதனை தொடர்ந்து, வைத்தியர் அர்ச்சுனாவினால் வெளியிடப்பட்ட காணொளி நீதிமன்றத்தில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. 

அக்காணொளி திரையிடப்பட்ட போது வைத்தியர் அர்ச்சுனாவும் நேரடியாக மன்றத்தில் உடனிருந்தார். 

மேலும் சான்றுரைத்த பணிப்பாளர் கேதீஸ்வரன், தமது 35 ஆண்டுகால மருத்துவச் சேவையில் தம்மீது எவ்வித இழுக்கும் ஏற்பட்டிருக்காத நிலையில், மிகவும் பொய்யாக முன்வைக்கப்பட்ட இக்குற்றச்சாட்டானது தம்மைப் பெரிதும் பாதித்துள்ளதாகத் தெரிவித்தார். 

குறிப்பாக இந்தக் காணொளியை அர்ச்சுனா வெளியிட்டதன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து பலர் தம்மை அச்சுறுத்தியதோடு, தமது குடும்பத்தினரையும் மிரட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் சான்றுரைத்தார்.

அதேவேளை அடுத்த வழக்கு தவணையின் போது, பணிப்பாளர் கேதீஸ்வரனிடம் வைத்தியர் அர்ச்சுனாவின் வழக்கறிஞரால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என குறுக்கு விசாரணைக்கு மன்று திகதியிட்டது.

No comments