திரைப்பட உலகில் மக்கள் மனங்களை வென்றதுபோல, தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுவீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுள்ள விஜய்க்கு கடற்தொழில் அமைச்சர் தெரிவித்துள்ள வாழ்த்திலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் பேராதரவு, நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை தாங்கிய நிலையில் தாங்கள் ஏற்றுள்ள இந்த உயரிய பொறுப்பு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என நம்புகிறேன்.
இளைஞர்களின் எதிர்காலம், சமூக நீதி, கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் மனிதநேய அரசியல் ஆகியவற்றை முன்னிறுத்தும் தங்களின் பயணம் மக்கள் மனங்களில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
திரைப்பட உலகில் மக்கள் மனங்களை வென்றதுபோல, இனி மக்கள் ஆட்சியிலும் தங்களின் அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் செயற்பாட்டின் மூலம் தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லுவீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.
தமிழக மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், மீனவர் சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள், தமிழர் பண்பாடு மற்றும் மொழியின் மேம்பாடு ஆகிய துறைகளில் தங்களின் தலைமையால் புதிய மாற்றங்கள் உருவாகட்டும்.
இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, மொழி, பண்பாடு மற்றும் உறவுகள் மூலம் நீண்டகால நெருக்கத்தை பகிர்ந்து வருகின்றன. அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தங்களின் தலைமையில் பல நல்ல முன்னேற்றங்களும் ஒத்துழைப்புகளும் உருவாகும் என எதிர்பார்க்கிறேன்.
தங்களின் அரசியல் பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமையவும், மக்கள் சேவையில் வரலாற்றுச் சாதனைகள் படைக்கவும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.









No comments