நான் தேவதூதன் ஒன்றும் அல்ல. நானும் ஒரு சாதாரண மனிதன் தான். நான் முன்னரே கூறியது போல, சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன். என்னால் எது சாத்தியமோ அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன். என முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதனைத்தொடர்ந்து முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
அதன்படி இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார். பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு கோப்பிலும் விஜய் கையெழுத்திட்டார்
இதையடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்றப்பின்னர் முதன் முறையாக உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
என் நெஞ்சில் குடியிருக்கும், உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம். சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டுமென்று ஒரு சாதாரண உதவி இயக்குனரின் பிள்ளை நான்
வறுமை என்றால் என்னவென்று எனக்கு தெரியும். பசியென்றால் என்னவென்று எனக்குத் தெரியும். உங்களில் ஒருவன் தான். உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் தம்பி..
இந்த தேர்தல் களத்தில் நான் இறங்கியபோது, நான் அதிக அவமானங்களையும், வலிகளையும் சந்திக்க நேரிட்டது. அது என்னை மட்டுமல்ல, என் மக்களாக உங்களையும் பாதித்தது. ஆனால், அதையெல்லாம் தாண்டி, எனக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி.
இத்தனைப் போராட்டங்களை கடந்து இன்று C.ஜோசப் விஜய்யாகிய நான்.. என்ற கூற்றை உண்மையாக்கியிருக்கின்றீர்கள். நான் தேவதூதன் ஒன்றும் அல்ல. நானும் ஒரு சாதாரண மனிதன் தான்.
நான் முன்னரே கூறியது போல, சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன். என்னால் எது சாத்தியமோ அவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவேன்.
மிக இக்கட்டான நிலையில் இந்த அரசாங்கத்தை நான் பொறுப்பேற்றிருக்கின்றேன். மிக அதிக கடன் தொகை, திறைசேரியே காலியாகியிருப்பதாக தெரிகின்றது. உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும் என்ன இருக்கின்றது இல்லை என்பது.
அனைத்தையும் பார்த்த பிறகு, என்ன விபரங்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக நான் உங்களுக்கு வெளியிடுவேன். இவற்றை சரிசெய்ய எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும்.
இது மக்களுடைய ஆட்சி, பெண்கள் பாதுகாப்பை மிகு உறுதியாக வைத்திருப்பேன். போதைப்பொருள் கலாசாரத்தை கட்டுப்படுத்த வேண்டிய முயற்சி இன்றிலிருந்து எடுக்கப்படும். சட்டம், ஒழுங்கு மற்றும் அனைவருக்குமான பாதுகாப்பை நான் உறுதிப்படுத்துவேன்.
என்னை அவமானப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், என்னை கஷ்டப்படுத்தியவர்களாகவே இருந்தாலும் அவர்களும் என் மக்கள்தானே. நண்பர்களாக இருந்தாலும் எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள் தானே
அடிப்படை விடயங்கள், கல்வி, மருத்துவம், சாலை வசதி உள்ளிட்டவற்றில் என்னுடை முதல் கவனத்தை செலுத்த வேண்டும் என்று தோன்றுகின்றது.
நான் முன்னதாகவே கூறியது போல, இந்த விஜய் மக்களது பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன். எனக்கு அது தேவையில்லை. தவறு செய்ய யாரையும் விடவும் மாட்டேன். அப்படியொரு எண்ணம் இருந்தால் இன்றே அதை அழித்து விடுங்கள்.
பெண்கள், அரச ஊழியர்கள் என அனைவரும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் அனைவரும் நன்றாக இருப்போம், நன்றாகவே இருப்போம்.
சிறுபான்மை இன மக்கள் எந்த காலத்திலும் துயருற கூடாது. எப்போதும் அனைவருக்காகவும் இந்த விஜய் இருப்பேன்.
அடுத்தது, இந்த விஜய் மாமாவோட குட்டி நண்பா நண்பீஸ் ஆகியோருக்கு மிகப்பெரிய நன்றியை நான் சொல்லியே ஆக வேண்டும். உங்களுடைய எதிர்காலத்திற்கான நான் உழைப்பேன்.
தமிழக வெற்றிக் கழக தோழர்களுக்கு எனது பெரிய நன்றிகள். நீங்கள் எனது உயிர். வாருங்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புதிய ஆட்சியை அமைத்திடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.









No comments