செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றன் மேல் ஒன்றாக இரு என்புகூடுகளும், சிறுவர்களுடைய என்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் என்புக்குவியல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனித புதையின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 13ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அது தொடர்பில் ஊடகங்களுக்கு சட்டதரணி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய அகழ்வின் போது, 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு என்பு தொகுதியும், சிறுவர்களுடைய என்பு தொகுதியும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு என்புக்கூட்டு குவியல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஒரு என்பு கூட்டின் கால் பகுதி சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது. அதற்கான காரணம் தெரியவில்லை. அதன் ஆய்வுகளின் பின்னரே அது தொடர்பில் கூற முடியும்.
அதேவேளை இன்றைய தினமும் என்பு கூட்டுடன் செப்பு துண்டொன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை அகழ்வின் போது நாணய வடிவிலான தாயத்து என நம்பப்படும் சான்று பொருள் ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments