தன் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தன்னிடம் வழங்கவில்லை என சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா, கிசோர் தெரிவித்துள்ளார்
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து , அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரை வடமாகாண ஆளுநர் , உப தவிசாளரின் பதவியை நீக்கியும் , நகர சபை உறுப்புரிமையை வறிதாக்கியும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கை பிரகாரம் நடவடிக்கை எடுத்தால் சாவகச்சேரியில் 700 க்கும் மேற்பட்ட கடைகளை மூட வேண்டியதாக இருக்கும்
கடந்த காலங்களில் உள்ளூராட்சி சபைகளினால் கட்டட அனுமதிகள் வழங்குவதில் கால தாமதங்கள் ஏற்பட்டன. அதனை நாம் தற்போது சீர் செய்துள்ளோம்.
புதிய வர்த்தக நிலையங்களை கட்டி ,வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடம் குடிபுகு சான்றிதழ் கட்டாயம் என்பதனை வலியுறுத்தி , குடிபுகு சான்றிதழ்களை பெற வைத்துள்ளோம்
ஆனால் நகர சபை கட்டடங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் உட்பட சில வர்த்தக நிலைய கட்டடங்கள் 50 ஆண்டுகளுக்கு மேலானது. அவற்றுக்கு குடிபுகு சான்றிதழ் பெறுவதில் பல சிக்கல்கள் உண்டு. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை அவ்வாறே பின் பற்றினால் பல வர்த்தக நிலையங்களை மூட வேண்டி வரும். அதனால் அது தொடர்பில் சபையில் பேசினேன்.
அண்மையில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தங்குமிடம் கட்டடப்பட்டு திறக்கப்பட்டது. அதற்கு எந்த சபையில் அனுமதி பெற்றனர். இராணுவத்தினர் முகாம்களுக்குள் கட்டட வேலைகளை செய்கின்றார்கள் அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது ? அது மட்டுமன்றி சாவகச்சேரியில் பல அரச கட்டடங்களுக்கே உரிய அனுமதிகள் இல்லாத நிலைமைகள் காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் , வர்த்தக நிலையங்களை முடக்கும் செயற்பாடாக அனுமதி விடயங்களை இறுக்க மாக பின்பற்ற முயல்கின்றனர்
நான் பதவிக்காக வரவில்லை. என் பதவி பறிபோனதால் அஞ்சி ஒதுங்கவும் இல்லை. எனக்கான நீதியை கோரி நான் நீதிமன்றம் செல்வேன் நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உண்டு. எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதிமன்றம் செல்லவுள்ளேன் என தெரிவித்தார்.









No comments