சுகாதார சேவை என்பது அரசியல் மேடையல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் சேவையாகும். எனவே அரசியல் வேறுபாடுகளை விடுத்து, தெல்லிப்பழை வைத்தியசாலையின் அபிவிருத்திக்கும் மக்களின் நலனுக்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை விஜயம் செய்த சுகாதார அமைச்சர், தலைமையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதாரப் பணியாளர்கள் பல்வேறு வளக்குறைபாடுகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றனர்.
அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் அரசாங்கம் முழு கவனம் செலுத்தியுள்ளது.
அவற்றுக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த வைத்தியசாலையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களுக்கும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தரமான, சமமான மற்றும் திறன்மிக்க சுகாதார சேவையை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்கும்.
சிலர் இந்த வைத்தியசாலையை மையமாகக் கொண்டு அரசியல் இலாபம் தேடும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
சுகாதார சேவை என்பது அரசியல் மேடையல்ல, அது மக்களின் உயிரைக் காக்கும் சேவையாகும். எனவே அரசியல் வேறுபாடுகளை விடுத்து, வைத்தியசாலையின் அபிவிருத்திக்கும் மக்களின் நலனுக்கும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்த அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என மேலும் தெரிவித்தார்.









No comments