நன்றி - மயூரப்பிரியன்
அந்நிலையில் வெள்ளிக்கிழமை வரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 501 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை 100 ஆவது நாளான இன்றைய தினம் செம்மணி மனித புதைகுழிக்கு அண்மித்த பகுதியில் எழுமாற்றாக தோண்டப்பட்ட இரண்டு சோதனை குழிகளில் ஒரு குழியில் இருந்து மனித என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றைய சோதனை குழியின் மேற்படை மண் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , நாளைய தினம் சனிக்கிழமை மேலும் அந்த குழியில் அகழ்வு நடைபெறவிருக்கிறது.
செம்மணி "சிந்துபந்தி இந்து மயானத்தில்" மின் தகன மேடை அமைப்பதற்காக கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அத்திபாரம் வெட்டிய போது, சில என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன
அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து கடந்த 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த 2025ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது.
அன்றைய தினத்தில் இருந்து முதல் கட்டமாக 09 நாட்களும் , இரண்டாம் கட்டமாக 45 நாட்களும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு , தற்போது மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக 56நாட்கள் நீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்றாம் கட்டத்தின் 46ஆவது நாள் அகழ்வு பணிகள் நடைபெற்றது.
அதன் அடிப்படையில் செம்மணியில் இதுவரை காலமும் 100 நாள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலான 100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் சிறுவர்கள் ,பெரியவர்கள், சிசுக்கள் என என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு , அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன
அது மாத்திரமின்றி என்புக்குவியல்களாகவும், ஒழுங்கு முறையின்றியும் நேர் சீரின்றியும்,, உட்கார்ந்த நிலையிலும் , கழுத்துடன் துண்டாட்டப்பட்டு , மண்டையோடு பிறிதொரு இடத்திலும் தலையில்லா முண்டமான என்புகூட்டு பிறிதொரு இடத்திலும் காணப்பட்ட என்புக்கூடுகள், மழை அங்கியுடனான சிறுவர் ஒருவரின் என்பு கூடு என என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
என்புகூடுகள் மாத்திரமன்றி சான்று பொருட்களாக குழந்தைகளுக்கான "பால் போச்சி" பாடசாலை புத்தக பை , வளையல்கள் , செருப்பு , காலுறைகள் , மோதிரம் , தாயத்துக்கள் , காப்புக்கள் , சட்டை பொத்தான்கள் என 150 சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட என்பு கூடுகள் மற்றும் சான்று பொருட்கள் , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை செம்மணி புதைகுழி அகழ்வு பணி நடைபெறும் இடத்தில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் லெனின்குமார் திறந்த நீதிமன்ற அமர்வினை நடாத்தி இருந்தார்.
அதன் போது,செம்மணி புதைகுழி அகழ்வு பணிகள் நடைபெறும் பகுதி தவிர அதனை அண்மித்த பகுதிகளிலும் GPR ரேடார் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் , செம்மணி மனித புதைகுழியில் அகழ்வெல்லையை விரிவுபடுத்த வேண்டும். என சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் இதுவரையில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் என்பவை தொடர்பான சகல அறிக்கையும் மன்றில் சமர்ப்பிப்பிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , நான்காம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதா , புதைகுழியில் அகழ்வெல்லையை விஸ்தரிப்பதா என தீர்மானிப்பதாக முடிவெடுக்கப்பட்டது.
அதேவேளை புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகளுக்கு கார்பன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என குற்றப்புலனாய்வு துறையினர் கோரியுள்ளனர். குற்றப்புலனாய்வு துறையினரின் கோரிக்கை தொடர்பிலும் , மீட்கப்பட்ட என்பு கூடுகள் தொடர்பிலும், கால நிர்ணயம் தொடர்பாக வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமா ? என்பது தொடர்பில் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி மேலதிக கலந்துரையிடலை மேற்கொண்டு தீர்மானிப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து முன்னிலையான சட்டத்தரணிகள் , இதுவரையில் என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் , நிபுணத்துவ அறிக்கைகள் , நிறுவனங்களிடம் கோரப்பட்ட அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும்.
அத்துடன் , தொல்லியல் ஆய்வுக்குழு மற்றும் சட்டவைத்திய அதிகாரியினால் , அகழ்வு பணிகளின் போது என்புக்கூடுகளை ஆவணப்படுத்த எடுத்த புகைப்படங்களை நீதிமன்ற கோப்புக்கு கொண்டு வர வேண்டும் எனவும் , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள என்புக்கூடுகள் , சான்று பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் என்பவற்றின் கட்டுக் காவலை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்
செம்மணியில் மீட்கப்பட்ட என்புகூடுகளில் மனித என்புக்கூடுகள் தான் என்பதனை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பிற சான்று பொருட்கள் தொடர்பில் கோரப்பட்ட அறிக்கைகள் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மன்றில் சட்டத்தரணிகள் கோரிக்கை வைத்தனர்.
"செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் முன்னெடுப்படும் ஒவ்வொரு தினமும் புதிது புதிதாக என்புக்கூடுகள் மீட்கப்பட்டே வருகிறது.
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க 56 நாட்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்காக அரசாங்கம் 2 கோடியே 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
"56 நாட்களை கடந்தும் அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டுமா என்பது தொடர்பில் அகழ்வு பணியின் இறுதி கட்டங்களின் போது நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய தீர்மானிக்கப்படும்" என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை பாதுகாக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளன. அது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.
நாட்டில் மரபணுக்களை பாதுகாக்கும் காப்பகம் எதுவும் , இதுவரையில் உருவாக்கப்படவில்லை. அதனை உருவாக்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணுக்களை சேகரித்து வைப்பதன் மூலம் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு அவை உதவியாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் நேற்று முன்தினம் புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் 100 நாட்களை கடந்தும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் , செம்மணி மனித புதைகுழி சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது,
அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் 26ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி அகழ்வு பணிகளை பார்வையிட்டார்
கடந்த யூலை மாதம் 22ஆம் திகதி செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மற்றும் பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மன், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலய தூதுவர்கள் பார்வையிட்டனர்.
அவர்களிடமெல்லாம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டறிய சர்வதேச விசாரணைகளை தேவை என வலியுறுத்தி உள்ளனர்
செம்மணி அகழ்வு பணி என்பது மண்ணை அகழ்ந்து எடுக்கப்பட்ட வெறும் என்புக்கூடுகள் என கடந்து போகும் விடயமல்ல, "என் பிள்ளை எங்கே?" என்று கேட்டு இன்றும் வீதிகளில் அழுது புரண்டு போராடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான தாய்மார்களின் நீதிக்கான மௌனக் கதறலை உலகிற்கு உணர்த்தும் ஒரு கண்ணீர்ச் சாட்சியமாக, இலங்கையின் மிக பெரிய புதைகுழியாக செம்மணி உருவாகியுள்ளது.









No comments