செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன.
100 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 507 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 501 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 46ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு மனித என்புக்கூட்டு குவியல் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் சிறுமியின் காப்புகள் இரண்டும் , ஊசி ஒன்றும் சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் ஒரு குழியில் இருந்து மனித என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணியில் 100 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, சிறுவர்கள் ,பெரியவர்கள், சிசுக்கள் என என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு , அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன
அது மாத்திரமின்றி குவியல்களாகவும் , ஒன்றின் மீது ஒன்றாகவும் , சிறிய என்புக்கூட்டை அணைத்தவாறு பெரிய என்புக்கூடும் , அருகருக்காகவும் , ஒழுங்கு முறையின்றியும், நேர் சீரின்றியும்,, உட்கார்ந்த நிலையிலும் , கழுத்துடன் துண்டாட்டப்பட்டு , மண்டையோடு பிறிதொரு இடத்திலும் தலையில்லா முண்டமான என்புகூட்டு பிறிதொரு இடத்திலும் காணப்பட்ட என்புக்கூடுகள், மழை அங்கியுடனும் சிறுவர் ஒருவரின் என்பு கூடு என என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
என்புகூடுகள் மாத்திரமன்றி சான்று பொருட்களாக குழந்தைகளுக்கான "பால் போச்சி" பாடசாலை புத்தக பை , வளையல்கள் , செருப்பு , காலுறைகள் , மோதிரம் , தாயத்து, நாணய குற்றிகள் என 150 பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட என்பு கூடுகள் மற்றும் சான்று பொருட்கள் , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.









No comments