வடமாகாண ரீதியாகப் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை உறுதிப்படுத்த வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் 'தேசிய போசாக்கு மாதம்' மற்றும் 'ENOUGH' பரப்புரைக்கு ஆதரவாக, சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனைச் சமூகம் மற்றும் வேள்ட் விசன் அமைப்பின் அனுசரணையுடன் தாய்மார்க் கழகங்கள் இணைந்து நடாத்திய போசாக்குக் கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் நேற்றைய தினம் புதன்கிழமை வட்டுக்கோட்டை பிரதேச மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது. அதன் போதே ஆளூனரிடம் மேற்குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் சங்கானையின் 35 தாய்மார்கள் கழகங்களாலும், குடும்ப நல உத்தியோகத்தர்களின் வழிகாட்டலிலும் பனைசார் உணவுகள், கடல்சார் உணவுகள், சிறுதானியங்கள், மரக்கறி இலைவகைகள், பால் மற்றும் முட்டைசார் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சிறப்பம்சமாக பாடசாலை சிற்றுண்டிச் சாலை மாதிரி அமைப்பும் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், கோழி, ஆடு, தாரா, காடை வளர்ப்பு போன்ற விலங்கு வேளாண்மை மூலமான பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் இரசாயன உரங்களற்ற சுகவாழ்வுத் தோட்ட முறைகளும் விளக்கமளிக்கப்பட்டன.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநரிடம், வடமாகாண ரீதியாகப் பாடசாலைச் சிற்றுண்டிச்சாலைக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவை உறுதிப்படுத்த வேண்டும் எனவும்,
சங்கானை பிரதேச மருத்துவமனையின் தரத்தை உயர்த்துவது மற்றும் அதன் ஆளணிப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என இரு பிரதான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன
குறித்த நிகழ்வில் தாய்மார்களுக்கான குழந்தை வளர்ப்புக் கலை பயிற்சிப் பரீட்சையில் தேச்சிபெற்ற 400 பேருக்கு ஆளுநர் மற்றும் அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், ஆரம்ப மழலைப் பராமரிப்புத் தொடர்பான இறுவட்டும் வெளியிடப்பட்டு ஆளுநரால் உத்தியோகபூர்வமாகக் கைளிளிக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனும் சிறப்பு விருந்திரனாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன், சங்கானை பிரதேச செயலாளர் உ.கவிதா உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.









No comments