காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை உள்ளடக்கிய விசேட உதவிப் பொதி ஒன்றினை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கத்திலே முக்கியமான ஒரு கொள்கை இருக்கின்றது; சட்டம் அனைவருக்குமே சமன். சட்டத்துக்கு மேலாக ஒருவரும் இல்லை.
காணாமலாக்கப்பட்ட பிரச்சனைகள் போன்ற சட்ட விரோதமான நடவடிக்கைகளுக்கும் சட்டம் சரியான முறையிலே நடைமுறைப்படுத்தப்படும். அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
நாட்டு மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியதும் இந்த எதிர்பார்ப்பிலாகும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயற்பாடுகளைப் பலப்படுத்தும் நோக்கில் அலுவலகத்தின் ஆளணிப் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுப் புதிதாக 69 உத்தியோகத்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக 2025ஆம் ஆண்டில் சுமார் 375 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், செம்மணி சமூகப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞான ரீதியாக முன்னெடுப்பதற்காக 57 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை உள்ளடக்கிய விசேட உதவிப் பொதி ஒன்றினை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது
குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.





.jpeg)



No comments