புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் MDK. விஜேவர்த்தன, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.
அதன் போது, தீவகப் பகுதிகளுக்கான சீரான கடல் போக்குவரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கல் குறிப்பாக நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான பயணிகள் கடல் போக்குவரத்தை மேம்படுத்துதல், தீவகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை தடையின்றி கொண்டு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மாவட்ட செயலர் வடமாகாண கடற்படை தளபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் மயிலிட்டித் துறைமுகப் பகுதியில் காணப்படும் இந்திய மீன்பிடிப் படகுகளை அப்புறப்படுத்துதல் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வட மாகாண கடற்படைத் தளபதியிடம் மாவட்ட செயலர் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வட மாகாண கடற்படைத் தளபதி,
பொதுமக்களின் கடல் போக்குவரத்துத் தேவைகளுக்கு கடற்படையினால் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் சிறந்த முறையில் மேற்கொள்வதுடன், மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும், சந்திப்பின் நிறைவில், வட மாகாண கடற்படைத் தளபதி மாவட்ட செயலருக்கு நினைவுச் சின்னமொன்றினையும் வழங்கி வைத்தார்.









No comments