Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தையிட்டி விகாரதிபதியால் அடாத்தாக பிடிக்கப்பட்ட பவானி வீதியை விடுவிப்பதால் சமாதான சீர்குலைவு ஏற்படாது


தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கினை மன்று தள்ளுபடி செய்துள்ளது. 

அத்துடன் வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரையும் மன்று வழக்கில் இருந்து முற்றாக விடுவித்துள்ளது.

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான "பவானி" வீதி காணப்படுகிறது. குறித்த வீதியினை விடுவிக்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி வீதி அளவீடு செய்யப்பட்டது. 

அதனை அடுத்து குறித்த வீதியை மறித்து அடைக்கப்பட்டுள்ள வேலியை விகாராதிபதி அகற்ற வேண்டும் எனவும் , தவறும் பட்சத்தில் பிரதேச சபை வேலியை அகற்றும், வேலியை அகற்றும் செலவீனத்தை விகாராதிபதி பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என தவிசாளர் கடிதம் மூலம் விகாராதிபதிக்கு அறிவித்து இருந்தார்.

அதனை அடுத்து பிரதேச சபை விகாரை வேலியை அடாத்தாக அகற்ற முற்படுவதாக பலாலி பொலிஸ் விகாராதிபதி முறைப்பாடு செய்திருந்தார். 

முறைப்பாட்டின் பிரகாரம் , தவிசாளரை பலாலி பொலிஸார் அழைத்து, வேலியை அகற்றினால் , இனங்களுக்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டு , நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும். சமாதான சீர்குலைவு ஏற்படும் எனவே வேலியை  அகற்றும் பணிகளை கைவிட வேண்டும் என அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளனர். 

அதற்கு தவிசாளர், மறுப்பு தெரிவித்து , பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விகாராதிபதியே அடாத்தாக கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் , வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என உறுதியாக கூறி இருந்தார். 

அந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்  வலி . வடக்கு பிரதேச சபை வீதியை மீட்கும் பணியை கைவிட வேண்டும் என்றும் , அதற்கு எதிராக நீதிமன்று தடையுத்தரவு வழங்க வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் மே மாதம் மனு தாக்கல் செய்தனர். 

குறித்த மனு மீதான விசாரணையின் போது, ஒரு தலைப்பட்சமாக விசாரணை செய்ய முடியாது என கூறிய மன்று , வலி. வடக்கு தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரை கடந்த மே மாதம் 11ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்திருந்தது. 

அதன் பிரகாரம் தவிசாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் அன்றைய தினம் மன்றில் முன்னிலையான நிலையில் , அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன் வைத்தார். 

அதனை அடுத்து குறித்த வழக்கின் மீதான கட்டளைக்காக இன்றைய தினத்திற்கு மன்று திகதியிட்டு இருந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை வழக்கு கட்டளைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது , வேலியை அகற்றி பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிப்பதால் , சமாதான சீர்குலைவுவோ  , இன நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என மன்று கருதுவதால் வழக்கினை தள்ளுபடி செய்வதாக மன்று கட்டளையிட்டது. 

No comments