கடந்த நவம்பர் மாதம் யுன்னான் (Yunnan provence) பகுதியில் இருந்து 16 யானைகள் தமது வாழ்விடத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்தன.
ஒரு யானைக்கு இடையில் குட்டி பிறந்ததால் சில நாட்கள் குட்டி ஈன்ற யானையுடன் காட்டில் இருந்துவிட்டு, குட்டி ஈன்ற யானையை விட்டு விட்டு 15 யானைகள் தமது பயணத்தை ஏப்ரல் மாதம் மீண்டும் ஆரம்பித்தன.
இதில் ஆறு பெண் யானைகள், மூன்று ஆண் யானைகள், மூன்று குட்டி யானைகள், மூன்று களிறுகள் என 15 யானைகள் கொண்ட குழுவொன்றே இந்த பயணத்தை ஆரம்பித்தனர்.
இந்த 15 யானைகளும் தமது வாழ்விடத்திலிருந்து பல மைல்கள் பயணித்துள்ளன.
யானைகள் இப்படி உலவுவதால், யானைகள் உலாவும் பகுதி மக்கள் ஊரடங்கு காலம் போல வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர்.
யானைகளை துன்பப்படுத்தகூடாது என்ற சட்டம் சீனாவில் உள்ளது. யானைகள் பெரும்பாலும் பிரதான வீதிகளில் பயணிக்கின்றன. ஒரு சில நேரங்களில் மட்டுமே உணவு தேடி ஊருக்குள் வருகின்றன. இதை தடுப்பதற்காக ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆங்காங்கே பெரிய தொட்டியில் யானைகளுக்கு பிடித்த உணவுகளான மக்கா சோளம், அன்னாசிப்பழம், பழவகைகளையும், தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரும் வைத்துள்ளனர்.
இந்த யானைகள் மக்களுக்கு எந்த உயிர்சேதத்தையோ வீதிகளில் பொருட்களுக்கோ சேதம் ஏற்படுத்தவில்லை.. பொலிஸாரும் 400க்கும் மேற்பட்ட அவசரகால பணியாளர்களும் இந்த கண்காணிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதுடன் 15 யானைகளையும் ட்ரோன் கமராக்கள் மூலம் கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனர்.
இவ்வாறு நீண்ட பயணம் செய்யும் யானைகள் ஒன்றாக உறங்கும் புகைப்படங்களும் வௌியாகி கவனத்தை ஈர்த்திருந்தன. இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வந்தனர்.
யானைக்கூட்டம் இப்படி வௌியில் வர காரணமாக விவசாயத்துக்காக காடுகள் அழிப்பே என கூறப்பட்டுள்ளது. அதன் சொந்த வாழ்விடத்தில் இருக்கும் மழைக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுவருகிறது என்கின்றனர் சீனாவின் சூழலியல் செயற்பாட்டாளர்கள். ஏற்கெனவே சீனாவில் இந்த ஆசிய யானைகள் பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலில்தான் இருக்கின்றன.
சுமார் 300 யானைகள்தான் யுன்னான் மாகாணத்தில் தற்போது வாழ்ந்துவருகின்றன. இதனால் ஒன்றாக இருந்த பல யானைக் கூட்டங்களும் ஆங்காங்கே பிரிந்து தனித்துவிடப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் நவம்பர் மாதம் தமது பயணத்தை ஆரம்பித்த யானைக்கூட்டம் தற்போது மீண்டும் தமது வாழ்விடத்தை நெருங்கி வந்து கொண்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திக்கு :- https://www.tamilnews1.com/2021/06/6566565.html









No comments