விடுமுறை வழங்காத காரணத்தாலையே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் சார்ஜெண்ட் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.45 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜெண்ட் தர பொலிஸ் உத்தியோகஸ்தர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேவேளை , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் சார்ஜெண்ட் மொனராகலை மாவட்டத்தில் உள்ள அந்திமலை பொலிஸ் நிலையத்தில் இரண்டு T56 ரக துப்பாக்கிகள் மற்றும் 19 துப்பாக்கி ரவைகள் என்பவற்றுடன் சம்பவம் நடைபெற்று ஓரிரு மணித்தியாலத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரிய போது , அவர் விடுமுறை வழங்க மறுத்திருந்தார். அந்த ஆத்திரத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு , நள்ளிரவு விசேட சுற்றுக்காவல் நடவடிக்கைக்கு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் செல்வதற்கு தயாரான போது , குறித்த பொலிஸ் சார்ஜெண்ட் பொலிஸ் பொறுப்பதிகாரியை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அதனை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீதும் கண் மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு , பொலிஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகளுடன் தப்பி சென்று அந்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை அடுத்து , பொலிஸ் நிலையம் பொலிஸ் விசேட அதிரடி படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
No comments