யாழ்ப்பாணத்தில் காணி இல்லாதவர்களுக்கு நவீன வசதிகளுடன் அடுக்கு மாடி குடியிருப்பு அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது , அங்கு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
மீள் குடியேற்ற அமைச்சசினால் 10இலட்சமாக இருந்த வீட்டுத்திட்ட கொடுப்பனவுகள் 15 லட்சமாக அதிகரித்து பின்னர் மீளவும் தற்போது 5 இலட்சம் அதிகரிக்கப்பட்டு 20 இலட்சமாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது 125 வீடுகளுக்கான காசோலைகள் கையளிக்கப்படவுள்ளது. தொடர்ந்தும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டு தேவையை விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளோம்.
காணி இல்லாதவர்களுக்கு பொறிமுறை ஒன்றின் ஊடாக அவர்களுக்கும் வீட்டு திட்டத்தை வழங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை அமைப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி கட்டடங்களின் அமைப்பு முறையை ஏற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.
அத்துடன் சஜித் பிரேமதாசவினால் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் வீடுகள் பூர்த்தி செய்யப்படாமல் காணப்படுகிறது, அதற்குரிய பொறிமுறையை ஏற்படுத்தி அதனை நிவர்த்தி செய்வோம்,
தற்போது வழங்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்துக்கான காசோலையை மக்கள் பெற்று வீட்டினை துரிதமாக நிர்மாணிக்க வேண்டும். அதற்கு அரச உத்தியோத்தர்கள் பிரதேச செயலாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தெரிவித்தார்.









No comments