இலங்கையில் தற்சமயம் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பொதுப் பாதுகாப்பு, அமைதி மற்றும் புயலுக்குப் பிந்தைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் அன்றாட ஜீவனோபாயத்திற்குத் தேவையான அத்தியாவசிய விநியோகங்கள் மற்றும்
சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமாநாயக்கவின் கையொப்பத்துடன், 2026 மே 28ஆம் திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.
இதன்படி, அரசமைப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள
விசேட அதிகாரங்களின் பிரகாரம், 15 முக்கிய சேவைகள்
அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன:
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள்.
பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் விநியோகம்.
வைத்தியசாலைகள், பராமரிப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் நோயாளி பராமரிப்புச் சேவைகள்.
பயணிகள் மற்றும் பொருட்களுக்கான பொதுப் போக்குவரத்துச் சேவைகள்.
வீதிகள், பாலங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் ரயில் பாதைகளைப் பேணுதல்.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சேவைகள்.
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல்.
மாவட்ட, பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் களமட்ட அதிகாரிகளின் சேவைகள்.
அவசர நோயாளர் காவு வண்டி (Gilan ratha) சேவைகள்.
இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதிச் சேவைகள்.
ளூராட்சி மன்றங்களின் நீர், மின்சாரம், தீயணைப்பு, கழிவுவகற்றல் மற்றும் துப்புரவுச் சேவைகள்.
நீர்ப்பாசனம் தொடர்பான அனைத்து சேவைகள்.
தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகத் துறை சார்ந்த சேவைகள்.
தாழ்நிலங்களை நிரப்புதல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி சார்ந்த சேவைகள்.
அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் அல்லது கூட்டுறவுச் சங்கங்கள்
மூலம் வழங்கப்படும் இந்தச் சேவைகளுக்கு எவ்வித தடங்கல்களும் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.









No comments